search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய சலுகைகள்"

    தமிழக பட்ஜெட் நாளை (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. #TamilNaduBudget
    சென்னை:

    தமிழக சட்டசபையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த மாதம் (ஜனவரி) 2-ந் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து 3-ந் தேதி கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடைபெற்றது. 8-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பதில் உரையுடன் சட்டசபை கூட்டம் முடிவடைந்தது.

    இந்த நிலையில், 2019- 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை (நிதிநிலை அறிக்கை) தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை நாளை (வெள்ளிக்கிழமை) மீண்டும் கூடுகிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு நிதித்துறை அமைச்சரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகிறார்.



    இது தொடர்பான அறிவிப்பை கடந்த மாதம் (ஜனவரி) 31-ந் தேதி சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டார். அதன் அடிப்படையில், நிதித்துறை அமைச்சரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். அவர் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்வது குறிப்பிடத்தக்கது. சுமார் 2 மணி நேரம் பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என்று தெரிகிறது. இதற்காக சட்டசபையில் அவரது இருக்கையில் தனி மேடை அமைக்கப்பட இருக்கிறது.

    பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால், வழக்கமான பட்ஜெட்டை போல் அல்லாமல், அதிகமான அளவுக்கு புதிய அறிவிப்புகளும், சலுகைகளும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என்று தெரிகிறது. ஏற்கனவே, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதுபோன்ற அறிவிப்பு தமிழக பட்ஜெட்டிலும் இடம்பெறும் என்று தெரிகிறது. அதேபோல், புதிய அறிவிப்புகளுக்கும் பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசித்து முடித்ததும் அன்றைய சட்டசபை நிகழ்வுகள் நிறைவு பெறுகிறது. அதைத் தொடர்ந்து, சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பதை முடிவு செய்வதற்காக சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்க இருக்கிறது. அனேகமாக, 11-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 5 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெற வாய்ப்பு இருக்கிறது.

    ஒவ்வொரு நாளும் முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. இதில், உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில் (ஜீரோ ஹவர்) எதிர்க்கட்சியினர் முக்கிய பிரச்சினைகளை எழுப்புவார்கள்.

    அதன்பின்னர், பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும். இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிப்பார். இந்த விவாதம் முடிந்ததும், 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விவாதங்களின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முழுமையாக பதில் அளித்துப் பேச இருக்கிறார். அத்துடன் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடையும்.

    பொதுவாக, பட்ஜெட் கூட்டத் தொடரில், துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் தேர்தலுக்கு பிறகு ஜூன் மாதம் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. இந்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை தமிழக அரசின் கடன் அளவு ரூ.3½ லட்சம் கோடியாக இருக்கும் என்று ஏற்கனவே மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கஜா புயல் நிவாரணச் செலவு, பொங்கல் பரிசுச் செலவு (ரேஷன் அட்டைக்கு தலா ஆயிரம் ரூபாய்) போன்ற செலவுகளினால், தமிழக அரசின் நிதிச்சுமை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    தமிழக அரசின் கடுமையான நிதிச்சுமை குறித்து இந்தக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என்று தெரிகிறது. அதேபோல், வறட்சி பாதிப்பு, கோடநாடு கொலை விவகாரம், ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை, குடிநீர் தட்டுப்பாடு, ஜாக்டோ - ஜியோ போராட்டம் போன்ற பல்வேறு முக்கிய பிரச்சினைகளையும் எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று கூறப்படுகிறது. எனவே, இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. #TamilNaduBudget 
    விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் அவதிப்படும் விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கிற விதத்தில் புதிய சலுகைகளை அறிவிக்க மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #Farmer #CentralGovernment
    புதுடெல்லி:

    இந்தியா ஒரு விவசாய நாடு. ஆனால் இன்றைக்கு விவசாயிகள் நிலை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. ஏறத்தாழ 20 ஆண்டுகளாகவே விவசாயிகள் வேதனையில் சிக்கித்தவித்து வருகின்றனர்.

    அவர்களது மிகப்பெரிய மனக்குறை, கடன்களை வாங்கி சாகுபடி செய்தாலும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்பதுதான்.

    இந்த நிதி ஆண்டு, கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விவசாயிகளுக்கு மிகவும் மோசமான ஆண்டாக முடியப்போகிறது என்பதை அரசின் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

    டிசம்பர் மாத மொத்த விலை குறியீட்டு எண் விவரங்களை மத்திய வர்த்தக, தொழில் துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது. அதில் முதன்மை உணவு பொருட்களின் மொத்த விலை குறியீட்டு எண், கடந்த ஆண்டின் ஜூலை மாதம் தொடங்கி தொடர்ந்து 6 மாதங்களாக எதிர்மறையாக அமைந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, முதன்மை உணவுப்பொருட்களின் விலை தொடர்ந்து குறைந்து உள்ளன.

    முதன்மை உணவு பொருட்களின் மொத்த விலை குறியீட்டு எண் ஜூலை மாதத்தில் மைனஸ் 2.1 சதவீதம், ஆகஸ்டு மாதத்தில் மைனஸ் 4 சதவீதம், செப்டம்பர் மாதத்தில் மைனஸ் 0.2 சதவீதம், அக்டோபர் மாதத்தில் மைனஸ் 1.4 சதவீதம், நவம்பர் மாதம் மைனஸ் 3.3 சதவீதம், டிசம்பர் மாதம் மைனஸ் 0.1 சதவீதம் என இருந்து இருக்கிறது.

    கடந்த 1990-ல் இப்படி முதன்மை உணவு பொருட்களின் மொத்த விலை குறியீட்டு எண் தொடர்ந்து இருமுறை எதிர்மறை வளர்ச்சியைக் கண்டுள்ளது.

    விவசாய உற்பத்தி பொருட்களின் விலை குறைந்ததால், விவசாயிகளின் வருமானம் குறைந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இவ்வளவுக்கும் கடந்த ஜூலை மாதம் 14 விவசாய பொருட்கள் மீதான குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்தியது. இருப்பினும் கரீப் பருவத்தில் (சம்பா) குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு விவசாயிகளுக்கு பலன் தரவில்லை. ஏனெனில் பொருட்களுக்கு கிராக்கி குறைந்தது.

    கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்ற பின்னர், விவசாயிகளின் வருமானம் 2 மடங்காக ஆக்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை.

    இருப்பினும் சமீபத்தில் நடந்த பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில், விவசாயிகள் தொடர்பாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அந்த தீர்மானம், “சமீப ஆண்டுகளில் பட்ஜெட்டில் விவசாயத்துக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக ஆக்க வேண்டும் என்ற இலக்கை அரசாங்கம் வேகமாக நெருங்கிக்கொண்டிருக்கிறது. பாரதீய ஜனதா கட்சி அரசு வழங்கப்பட்டுள்ள உரிய காலத்திற்குள் விவசாயிகளின் வருமானம் 2 மடங்காக உயர்த்தப்படும் என்ற நோக்கத்தை அடைவதில் இந்த தேசிய செயற்குழு நம்பிக்கை வைத்துள்ளது” என கூறப்பட்டு உள்ளது.

    விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் படுகிற இன்னல்களால்தான் சமீபத்தில் இந்தி பேசுகிற மாநிலங்களான சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பாரதீய ஜனதா கட்சிக்கு தோல்வியை தந்துள்ளது.

    அதே நேரத்தில் இந்த தோல்வி வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் நடந்து விடக்கூடாது என்பதில் பாரதீய ஜனதா கட்சி எச்சரிக்கையுடன் உள்ளது.

    எனவே தொடர்ந்து அவதிப்படும் விவசாயிகளின் நலன்களை பேணுகிற வகையில் அவர்களுக்கு புதிய சலுகைகள் வழங்குவதற்கான ஒரு திட்டத்தை மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

    குறிப்பாக விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு நேரடி வருமான ஆதரவு, 1 ரூபாயில் பயிர்க்காப்பீடு, விவசாயிகளுக்கு அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை ஈடுகட்டுகிற வகையில் ஒரு ஏக்கருக்கு ரூ. 2 ஆயிரம் வழங்குதல் உள்ளிட்டவை பரிசீலனையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பான அறிவிப்பினை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாக பாரதீய ஜனதா கூட்டணி அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
    ×